மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் விழிப்புணர்வு பேரணி
அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் 100சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு மோட்டார்பைக் பேரணி நடைபெற்றது.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டார்பைக் பேரணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. பேரணியை மாவட்ட கலெக்டர் ரத்னா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
150க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் முக்கிய வீதிகளின் வழியே சென்று பஸ் ஸ்டாண்டை அடைந்தனர். இதற்கு முன்பாக வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உறுதியாக நாங்கள் வாக்களிப்போம் என்பதை கையெழுத்திட்டு உறுதி செய்தனர்.இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ., ஜெய்னுலாபுதீன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பொம்மி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) பாரதி, முடநீக்கியல் வல்லுனர் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.