பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பங்கள் : கலெக்டர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் சேர விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கென 19 பள்ளி விடுதிகளும், 2 கல்லூரி விடுதிகளும் மற்றும் 1 பாலிடெக்னிக் கல்லூரி விடுதியும் மாணவியர்களுக்கென 9 பள்ளி விடுதிகளும், 1 கல்லூரி விடுதியும் ஆகமொத்தம் 32 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் உணவும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.
விடுதியில் தங்கிப்பயிலும் 4 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு 4 இணைசீருடைகள் வழங்கப்படும். மேலும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வழிகாட்டி உபகரணங்கள் வழங்கப்படும்.
பள்ளி விடுதிகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ, மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியர்களும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
பி.வ, மி.பி.வ விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியர்களும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விடுதியில் சேர மாணவ, மாணவியரது பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8.கி.மீ க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது. இவ்விடுதிகளில் சேர விருப்பம் உள்ள தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பாளர் அல்லது காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதிக்காப்பாளர் அல்லது காப்பாளினிகளிடமோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலோ 15.11.2021-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும்பொழுது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்கத் தேவையில்லை.
விடுதியில் சேரும் பொழுது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. எனவே, மாணவ, மாணவியர் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.