அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடை! உறுதி செய்த உயர்நீதிமன்றம்!
அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸிற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
HIGHLIGHTS
அதிமுக சின்னம் மற்றும் கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதிமுக இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஒ.பி.எஸ். தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில் தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஒபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி வழக்கில் இரு தரப்பு இறுதி வாதங்களை கேட்டறிந்தார். இரு தரப்பு வாதங்களும் மார்ச் 12 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பில் ஓபிஎஸிற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுக கொடி, சின்ன, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த வித்திக்கப்பட்ட தடையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த வாரம் ஓபிஎஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும். படிவம் ஏ மற்றும் படிவம் பி யில் கையெழுத்திட அதிகாரம் வழங்க வேண்டும். 2025 டிசம்பர் வரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக தொடர தனக்கு தகுதி இருப்பதாக தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்திற்கான பதிலை தற்போது வரை தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.