நலம் பெற்று வருகிறேன்; அனைவரையும் நேரில் சந்திக்கிறேன் - இயக்குநர் பாரதிராஜா
‘நலம் பெற்று வருகிறேன்; விரைவில் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன்’ என, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
HIGHLIGHTS
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர் பாரதிராஜா. தற்போது நடிகராகவும் வலம் வரும் இவர், கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டார். சென்னை, தி.நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் டாக்டர்களின் ஆலோசனைப்படி சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு நேற்று மாற்றப்பட்டார்.
‛‛பாரதிராஜா நலமாக இருக்கிறார், சளி தொற்று தொல்லை இருக்கிறது. விரைவில் நலம் பெற்று பாரதிராஜா வீடு திரும்புவார்'' என அவரை நேரில் சந்தித்த பாடலாசிரியர் வைரமுத்து, செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து அவரது உதவியாளர் சுரேஷ் கூறுகையில், ‛‛பாரதிராஜா நலமாக உள்ளார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மெல்ல தேறி வருகிறார். இப்போதைக்கு பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. ஒரு வாரத்திற்குள் வீடு திரும்புவார்,'' என்றார்.
பாரதிராஜா வேண்டுகோள்
இதனிடையே பாரதிராஜா சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர், ‛‛உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையால், நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், என்னை நேரில் காண வர வேண்டாம். என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று, உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும், போனிலும், இணையதளம் மூலமும் நலம் விசாரித்த, நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.