மீண்டும் தயாரிப்பாளரான பொன்னியின் செல்வன் நடிகை லட்சுமி ஐஸ்வர்யா
இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி மீண்டும் தயாரிப்பாளரானார்.
HIGHLIGHTS
அண்மையில், உலகமெங்கும் வெள்ளித்திரையில் வெளியாகி, ஒட்டுமொத்த உலகத் திரைப்பட ரசிகர்களையும் தன்னகத்தே ஈர்த்து தனிப்பெரும் திரைப்படமாக திரையரங்குகளில் வசூல் சாதனை, ஏகோபித்த வரவேற்பு என வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'.
அமரர் கல்கி எழுதிய வரலாற்றுப் புதினம், 'பொன்னியின் செல்வன்'. தமிழ் வாசகர்களிடையே பெருவாரியான வாசகர்களின் விருப்பப் புதினம் இது. இப்புதினத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்கிற முயற்சி எம்.ஜி.ஆர். தொடங்கி கமல்ஹாசன் உள்ளிட்ட பலரது முயற்சி நிறைவேறாமல் போன நிலையில், பலருக்கும் கனவுப்படமாக இருந்த 'பொன்னியின் செல்வன்' இயக்குநர் மணிரத்னத்துக்கும் கனவுப் படம். அப்பெருங்கனவை இயக்குநர் மணிரத்னம் பெரிதும் முயன்று இன்று நிறைவேற்றி நிமிர்ந்து நின்று மகிழ்ந்திருக்கிறார்.
இப்படத்தில் பங்கேற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்குமே பெருமித மகிழ்வு என்பது மிகையல்ல. அனைவருமே அத்தனை மகிழ்வோடு கொண்டாடுகிறார்கள். இதில் நமக்கான வாய்ப்பு அமையவில்லையே என்கிற ஏக்கமும் பலருக்கு ஒருபுறம் உண்டு.
இந்தநிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ' பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்க தனக்கு கிடைத்த வாய்ப்பு, வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று என்று கூறும் ஐஸ்வர்யா லட்சுமி, தனது சிறந்த நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். வந்தியத் தேவனாக கார்த்தியுடன் தோன்றும் காட்சிகளில் பூங்குழலி கதாபாத்திரத்தில் தோன்றும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு ரசிகர்களிடையே அத்தனை வரவேற்பு.
இதன்பிறகுதான், நடிகை ஐஸ்வர்யா லட்சுமியை இதுவரை தெரியாதவர்கள், யார் இந்த ஐஸ்வர்யா லட்சுமி என்று தேடித் தெரிந்து கொண்டனர். நடிகர் விஷால் நாயகனாக நடித்த 'ஆக்ஷன்' படத்தின் மூலம்தான் தமிழில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ் நாயகனாக நடித்த, 'ஜகமே தந்திரம்' படத்தில் இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார்.
இவ்விரு படங்களைத் தொடர்ந்து தமிழ் ரசிகர்களின் அறிந்த முகமாக ஆன ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சாய் பல்லவி நடித்த, 'கார்கி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக தயாரிப்புத் துறையில் தடம் பதித்தார். மேலும், 'கார்கி' படத்தில் நடிக்கவும் செய்தார் ஐஸ்வர்யா லட்சுமி. அதன்பிறகுதான், இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து அழைப்பு வரவே, நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, இயக்குநர் மணிரத்னத்தை சென்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து, 'பொன்னியின் செல்வன்' வரலாற்றுப் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அமைந்தது. மகிழ்ச்சிப் பெருக்கோடு, மிகுந்த ஈடுபாட்டோடு பூங்குழலி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து முடித்தார். அதன்மூலம் இப்போதளவும் வரவேற்பும் பாராட்டும் வந்து குவிகிறது நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு.
இந்தநிலையில், தற்போது தமிழிலும் பிற மொழிகளிலுமாக 'குமாரி' என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, ''நான் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் மணிரத்னத்தின், 'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் நான் ஏற்று நடித்த பூங்குழலி கதாபாத்திரத்திற்காக, எனக்கு நாள்தோறும் பாராட்டுகள் கிடைத்த வண்ணம் உள்ளன. இது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
தற்போது, 'அம்மு' என்கிற தெலுங்குத் திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளேன். இப்படம் ஓ.டி.டி. தளத்தில் அக்டோபர் 19 அன்று வெளியாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 28-ம் தேதி 'குமாரி' என்கிற மலையாளப் படமும் வெளியாகிறது. இதிலும் நாயகியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்'' என பெருமிதம் பொங்க தெரிவித்தார்.