இன்று தடுப்பூசி நடக்குமா - திருப்பூர் மாநகராட்சி சொல்வதென்ன?
திருப்பூர் மாநகராட்சியில், இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
HIGHLIGHTS
தட்டுப்பாடு நிலவுவதால், திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60, வார்டுகளில் 17, ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 34, பகுதிகளில் தினசரி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
எனினும், தட்டுப்பாடு காரணமாக கடந்த மூன்று நாட்களாக தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் பொது மக்கள் சில தடுப்பூசி மையங்களில் வந்து காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஏற்கனவே வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்றும் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பூசி போடப்படமாட்டாது என, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.