திருப்பூரில் 229 வாகனங்களுக்கு அபராதம்; ஆர்.டி.ஓ., அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூரில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி வாகன சோதனையில், ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 229 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
HIGHLIGHTS
சென்னைக்கு அடுத்தபடியாக, மாநகர பகுதியில், வாகன போக்குவரத்து மிக அதிகம் நிறைந்த மாநகரமாக திருப்பூர் உள்ளது. பெரும்பாலான வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்படுகிறது. இதனால், முக்கிய இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகளவில் நடக்கிறது. முறையான ஆவணங்கள் இல்லாமல், ஏராளமான வாகனங்களும் இயக்கப்படுகிறது. குடிபோதையில் வாகனம் இயக்குதல், அதிவேகம், ஏர்ஹாரன் பயன்படுத்துதல், ஒருவழிப்பாதையில், விதிமீறி எதிரில் வருதல், வேக வரம்பு கட்டுப்பாட்டை மீறுதல், வாகனத்தில் அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல் உள்ளிட்ட விதிமீறல்கள், திருப்பூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், கோவை சரக இணை போக்குவரத்து கமிஷனர் சிவகுமாரன் உத்தரவுபடி, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், நேற்று காங்கயம் ரோடு, சின்னக்கரை, ஊத்துக்குளி, வீரபாண்டி பிரிவு, மங்கலம் ரவுண்டானா, பலவஞ்சிபாளையம், பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 10 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தனியார் பஸ்கள், ஷேர் ஆட்டோ, மினி டெம்போ, ஆம்னி பஸ், வேன் உள்பட அனைத்து வாகனங்களையும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
நேற்று ஒரே நாளில், 1,218 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. இதில் தகுதிச் சான்று இல்லாத 40 வாகனங்கள். வரி ஏய்ப்பு செய்த 8 வாகனங்கள், அனுமதி பெறாத 5 வாகனங்கள், செல்போன் பயன்படுத்தியது, இன்சூரன்ஸ், மற்றும் உரிய ஆவணமின்றி இயக்கி வந்த மொத்தம் 229 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வாகன ஆய்வில் எந்த ஒரு ஆவணம் இன்றி இயக்கப்பட்டு வந்த 53 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தியதில், தகுதிச் சான்று இல்லாத வாகனங்களை இயக்கிய 217 வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இணக்க கட்டணம் மற்றும் வரியாக ரூ.16 லட்சத்து 21 ஆயிரத்து 800 அபராதமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
அதிகாரிகள் ஆலோசனை:
திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கோவை சரகம் இணை போக்குவரத்து கமிஷனர் சிவகுமாரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தனியார் பஸ் மற்றும் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளுதல், அதிக விபத்துகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிதல், உரிய முறையில் கட்டணங்கள் வசூல் செய்வது, புதிய வாகனங்கள் பதிவேற்றம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், மற்றும் முருகானந்தம், பாலமுருகன், செந்தில் குமார், ஈஸ்வரமூர்த்தி, சிவகுருநாதன், ஜெயதேவராஜ், தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.