கோவில்களில் குண்டு வைப்பதாக மிரட்டல்; திருப்பூரில் பரபரப்பு
திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள முருகன் கோவில்களை, வெடிகுண்டு வைத்து தகர்க்க போவதாக, வந்த போன் தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறை(கண்ட்ரோல் ரூம்)க்கு நேற்றிரவு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' பாரில் இருந்து பேசுவதாகவும், தனக்கு அருகே இருந்துகொண்டு மது அருந்திய 2பேர் , 'திருப்பூர் படியூரில் உள்ள முருகன் கோவில், கோவை மருதமலை முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுங்கள்,' என்று பேசி விட்டு உடனே போனை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சென்னை போலீசார் திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார், திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' பாரில் சோதனையிட்டனர்.
அப்போது போனில் தகவல் தெரிவித்த நபர் அங்கு இல்லை. மேலும் அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது. 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன், போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் போனில் பேசிய நபர், திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்த சரவணன் (வயது 47) என்பது தெரியவந்தது. இன்று காலை அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 2019ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய அவருக்கு, தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
உண்மையிலேயே 2பேர் கோவிலில் குண்டு வைத்து தகர்க்க போவதாக பேசியதை பார்த்து, சரவணன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தாரா?, அல்லது மனநிலை பாதிப்பு காரணமாக இப்படி செயல்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 'டாஸ்மாக்' பாரில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, அதில் மர்மநபர்கள் யாராவது வந்து சென்றுள்ளனரா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து, திருப்பூர் மாநகரில் கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவில்களில் குண்டு வைக்கப்போவதாக வந்த தகவலால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கமாக இதுபோன்ற போன் அழைப்பு மிரட்டல்கள், வெத்து மிரட்டல்களாகவே பெரும்பாலும் இருக்கும். நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், பள்ளிகள், கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள், ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம் என, இதுபோன்ற மிரட்டல்கள் வருவது உண்டு. மனநலம் பாதித்தவர்கள், குடிபோதையில் இருப்பவர்கள் இத்தகைய தவறுகளை செய்வதும் உண்டு. எனினும், தற்போதைய எச்சரிக்கையான சூழலில் இதுபோன்ற மிரட்டல்களை, தகவல்களை போலீசார் கூடுதல் கவனத்துடன் உஷாராக கவனித்து விசாரித்து வருகின்றனர்.