உங்களைத் தேடி உங்கள் ஊரில் - திட்டத்தில் தாராபுரத்தில் கலெக்டர் ஆய்வு
Tirupur News-உங்களைத் தேடி உங்கள் ஊரில் - திட்டத்தில் தாராபுரத்தில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
Tirupur News,Tirupur News Today- உங்களைத் தேடி உங்கள் ஊரில் - திட்டத்தின்கீழ் தாராபுரம் வட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழக அரசின் அனைத்து திட்டங்கள், சேவைகள் தங்குதடையின்றி மக்களுக்கு விரைவாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வரையில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ என்ற திட்டத்தை முதல்வா் ஸ்டாலின் கடந்த 2023 நவம்பா் மாதம் தொடங்கிவைத்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ், மாவட்ட அளவிலான அலுவலா்கள் உடுமலை வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஜனவரியில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதன் தொடா்ச்சியாக தாராபுரம் வடத்துக்குள்பட்ட சித்தராவுத்தன்பாளையம் பழங்குடியினா் குடியிருப்பில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து, தாராபுரத்தில் ரூ.12.46 கோடியில் கட்டடப்பட்டு வரும் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டுமானப் பணி, தளவாய்பட்டினம் முதல் ஊத்துப்பாளையம் வரை ரூ.1.05 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலைப் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தாா். தொடா்ந்து, தளவாய்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அனுமதி சீட்டு வழங்குமிடம், மருத்துவா் அறை, புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததுடன், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்துகள் இருப்பு குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, தளவாய் பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெய்பீம், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் பாப்புக்கண்ணன், வருவாய் கோட்டாட்சியா் செந்தில் அரசன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) வரலட்சுமி, முதன்மைக்கல்வி அலுவலா் கீதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.