உடன் பணிபுரிபவருக்கு கடிதம்! என்னிடமே கொடுக்கச் சொல்கிறாயா? பஞ்சாயத்து தலைவியைத் தாக்கிய கணவர்!
கணவன் மனைவி தகறாரு, பஞ்சாயத்து தலைவரைத் தாக்கிய கணவர் மீது தாக்குதல் நடத்திய அண்ணன்
HIGHLIGHTS
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து தலைவிக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் மெர்சியை கம்பு மற்றும் கல் கொண்டு தாக்கினார். இதில் மெர்சி படுகாயமடைந்தார்.
தனது சகோதரியை அடித்ததை அறிந்த நிலையில், மெர்சியின் அண்ணன் காலின்ஸ், பிரேம்குமாரை தாக்கினார். இதில் இருவரும் படுகாயமடைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே கானார்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி மெர்சி தான் இந்த பகுதி பஞ்சாயத்து தலைவர். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை வருவதும் பின் சமாதானம் ஆவதும் என வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே ஒரு சின்ன பிரச்னை சரியான புரிதல் இல்லாமல் பெரிய பிரச்னையாகி அடிதடி சண்டையாக மாறியுள்ளது. பஞ்சாயத்து தலைவியான மெர்சி தனது அலுவலகத்தில் பணிபுரியும் எழுத்தருக்கு கடிதம் ஒன்றை பணி நிமித்தமாக கொடுக்க வேண்டியிருப்பதால் அதனை தனது கணவரிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் இதனை கணவர் செய்யமாட்டேன் என்று மறுத்திருக்கிறார்.
இந்த பிரச்னையால் இருவருக்கும் உரசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தான் தனியாக தங்கிக் கொள்வதாக கூறிவிட்டு பின் வீட்டுக்கு அருகே ஆஸ்பட்டாஸ் சீட் போட்டு அறை அமைக்க திட்டமிட்டிருக்கிறார் மெர்சி. ஆனால் இதனை தவறாக புரிந்துகொண்ட கணவர், அவரிடம் சண்டைக்கு போயிருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட கோபத்தில் பிரேம்குமார் தனது மனைவி மெர்சியை கொடூரமாக தாக்கியுள்ளார். அருகிலிருந்த கம்பு, கற்கள் கொண்டு அடித்ததில் படுகாயமடைந்த மெர்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
தனது சகோதரி தாக்கப்பட்ட செய்தி அறிந்த அண்ணன் காலின்ஸ் உடனடியாக பிரேம்குமாருடன் சண்டைக்கு போக, இருவருக்கும் அடிதடி ஏற்பட்டு இருவரும் காயமடைந்துள்ளனர். இவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மானூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மெர்சி மற்றும் பிரேம்குமார் இருவரும் தற்போதைய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாயத்து தலைவி மற்றும் அவரது கணவர் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.