தாெடர் கனமழை: நெல்லையில் இன்று பிற்பகல் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தாெடர் மழை காரணமாக நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
HIGHLIGHTS
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் காலை முதல் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று பிற்பகல் முதல் பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நெல்லையில் கடந்த ஒரு வாரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை முதல் நெல்லையில் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பிற்பகல் 12 முப்பது மணி அளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது. நெல்லை மாநகரில் நெல்லை டவுன், நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை, கேடிசி நகர் ,என்ஜிஓ காலனி, பெருமாள்புரம், தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. இதைதொடர்ந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
இதேபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளான நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், களக்காடு, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேகம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் சாலைகளில் வாகனங்கள் அனைத்தும் முகப்பு விளக்குகளை ஒளிந்தபடி செல்கிறது. பிற்பகலில் மழை பெய்ய தொடங்கியதை அடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பிற்பகல் முதல் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.