/* */

போலீசுக்கு பயப்படாதவர் மனைவிக்கு பயந்து ஓட்டம் : இது நெல்லை கலெக்டர் ஆபீஸ் கூத்து

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று மாற்றுத்திறனாளி ஒருவர் மது அருந்திவிட்டு ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

போலீசுக்கு பயப்படாதவர் மனைவிக்கு பயந்து ஓட்டம் : இது நெல்லை கலெக்டர் ஆபீஸ் கூத்து
X

மது அருந்திவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை களேபேரமாக்கிய மாற்றுத்திறனாளி.

மது அருந்திவிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை களேபேரமாக்கிய மாற்றுத்திறனாளி. வெளியே அனுப்ப படாதாபாடுபட்ட போலீசார்.

நெல்லை மாவட்டத்தில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் முகாமில் பெரிய அளவில் மக்கள் பங்கேற்கவில்லை. இதனால் ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் திடீரென மாற்றுத்திறனாளி ஒருவர் ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மாவட்ட ஆட்சியரின் கார் முன்பு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து அலுவலகத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடி வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அந்த நபர் போலீசாரை பேசவிடாமல், எதற்கு வந்தேன் என்று கூட சொல்லாமல், எனக்கு நியாயம் வேண்டும். நான் ஆட்சியரை சந்திக்க வேண்டும் என்று புலம்பத் தொடங்கினார். அப்போது அந்த நபர் மது அருந்தியிருப்பது தெரியவந்ததால் போலீசார் அவரை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தனர். அதற்கு ஆமாம். நான் மது அருந்தி உள்ளேன். அரசு தானே மது விற்கிறது என்று போலீசார் திகைக்கும் அளவிற்கு கேள்வியெழுப்பினார்.

மதுபோதையில் ஆட்சியரை சந்திக்க முடியாது என்று எச்சரித்த போலீசார் மாற்றுத்திறனாளியை இரு சக்கர வாகனத்தோடு ஒரு வழியாக அலுவலகத்திற்கு வெளியே அழைத்துச் சென்றனர். அங்கிருந்து செல்லாமல் கலெக்டரை பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சி செய்வேன் என்று தலையில் அடித்து புலம்பினார். போலீசாரோ மாற்றுத்திறனாளி என்பதால் மரியாதையோடு பேசுகிறோம். உடனே இங்கிருந்து சென்றுவிடுங்கள். போதை தெளிந்த பிறகு மற்றொரு நாள் மனுவுடன் வாருங்கள். ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம் என்று தெரிவித்தனர். ஒட்டுமொத்த காவல்படையும் சூழ்ந்து கொண்டு சமாதானம் செய்தும் தொடர்ந்து மாற்றுத்திறனாளி ஆட்சியர் அலுவலகத்தை களேபேரமாக்கி வந்தார்.

இதற்கிடையில் அங்கிருந்த பெண் போலீஸ், அவரது மனைவியை பற்றி விசாரித்தபோது தனது மனைவிக்கு தெரியாமல் மது அருந்தியுள்ளேன். அவருக்குத்தெரிந்தால் பெரிய கலவரம் ஆகிவிடும் மேடம் என்றார். உடனே போலீசார் அவரது மனைவியின் செல்போன் நம்பரை கேட்டனர். காக்கி படைக்கு அஞ்சாத அந்த நபர்,மனைவியை பற்றி கேட்டதும் மிரண்டு போனார். உடனே நான் வருகிறேன் என்று கூறி விட்டு அங்கிருந்து தனது வாகனத்தில் மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தார். போலீசாரின் எச்சரிக்கைக்கு செவி சாய்க்காத அவர் மனைவி பற்றி கேட்டதும் கதிகலங்கி ஓட்டம் பிடித்த சம்பவம் அங்கிருத்த போலீசாரிடம் சிரிப்பலை ஏற்படுத்தியது.

விசாரணையில் அந்த நபர் நெல்லை மாவட்டம் தாழையூத்தை அடுத்த நாஞ்சாங்குளம் பகுதியை சேர்ந்த முருகன் என்பதும், சென்னையில் கட்டண கழிப்பிடத்தில் பணிபுரிந்து வந்தததாகவும் கூறப்படுகிறது. மேலும் கலப்பு திருமணம் செய்து கொண்டு நெல்லைக்கு வந்ததாகவும், ஆதார் கார்டு கேட்டு விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கார்டு வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதால் அதற்காகவே மனு அளிக்க வந்ததாகவும் மாற்றுத்திறனாளி தெரிவித்தார். தொடர் மழையால் இதமான குளிருக்கு ஃபுல் போதை ஏற்றிக் கொண்டு ஆட்சியரை சந்திக்க வந்த மாற்றுத்திறனாளியால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 1 Nov 2021 11:22 AM GMT

Related News