சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஊட்டச்சத்து விழிப்புணர்வு சமையல் போட்டி
ஊட்டச்சத்து விழிப்புணர்வு சமையல் போட்டியில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு ஆட்சியர் பரிசு வழங்கினார்.
HIGHLIGHTS
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழாவில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு சமையல் போட்டியில் திருவாரூர் மாவட்டத்திற்குட்பட்ட 10 வட்டாரத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுவினரும் கலந்து கொண்டனர். மேலும் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கோலப்போட்டியும் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுவின் செயல்பாடுகள் மாவட்டத்தில் சிறப்பாக உள்ளது.
தமிழக அரசானது மகளிர்சுய உதவிக்குழுவிற்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களும் நிறைவேற்றி வருகிறது. மேலும் மகளிர்குழு உறுப்பினர்கள் தங்களின் குழுவின் மூலம் சுய தொழில் செய்ய வங்கிகள் மூலம் வங்கிகடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்களை மகளிர்சுய உதவிக்குழுவினர் பயன்படுத்தி தங்களது குழுவின் செயல்பாடுகளை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
தொடர்ந்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு சமையல் போட்டியில் வெற்றிபெற்ற 3 மகளிர் குழுவிற்கும், கோலப்போட்டியில் வெற்றி பெற்ற 3 மகளிர் குழுவிற்கும் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.