திமுக ஆட்சியில் திட்டங்களை செயல்படுத்தவில்லை: அமைச்சர் வீரமணி
திமுக ஆட்சியில் இருந்த போது அறிவித்த திட்டங்கள் ஒன்றையும் செயல்படுத்தவில்லை என அமைச்சர் வீரமணி குற்றச்சாட்டு.
HIGHLIGHTS
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நடைபெற்ற அம்மா மினி கிளினிக் திறப்பு நிகழ்ச்சி, திருமண உதவி வழங்கும் திட்டம் மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதில் ஒரு பகுதியாக ஆற்காடு அடுத்த பக்கத்தில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரியில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூபாய் 52 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம், வீட்டுமனை பட்டா, உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 4,800 பயனாளிகளுக்கு அமைச்சர் வீரமணி வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர், தமிழக அரசு ஏழை எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
கொரானா காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அவர்களின் வாழ்க்கைத்தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக உணவுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் நியாயவிலைக் கடைகள் மூலமாக இலவச அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் நிதி உதவி வழங்கப்பட்டது.
திமுக ஆட்சியில் இருந்தபோது பல்வேறு திட்டங்களை அறிவித்தது ஆனால் அவை அறிவிப்போடு மட்டுமே இருந்தது மக்களுக்கு எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் செய்யவில்லை.
அவர்களின் குடும்பங்களுக்காகவே திட்டங்களைத் தீட்டி கொண்டனர். ஆனால் அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் பல்வேறு திட்டங்களை தெரிவித்த அமைச்சர், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் எந்த ஒரு மாநிலத்திலும் இது போன்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட வில்லை என தெரிவித்தார். பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகவே தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.
கிராமப்புறங்களில் வீடு இல்லாமல் வாழும் ஏழை எளிய மக்கள், ஐந்து வருடங்களுக்கு மேல் குடியிருக்கும் மக்களுக்கு அரசு விதிகளுக்கு உட்பட்டு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.