பேருந்து வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, முசிறியை அடுத்த ராமாபுரம் கிராம மக்கள், அரசு பேருந்து ராமாபுரம் வரை நின்று செல்ல பேருந்தை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிராம பொதுமக்களிடம் கேட்ட போது, ராமாபுரம் கிராமத்தில் விவசாயிகள் அதிகமாக வசித்து வருகின்றனர். இங்கு விளையும் கீரை, முள்ளங்கி போன்ற அத்தியாவசிய காய்கறிகளை எடுத்து சென்று வியாபாரம் செய்வதற்கும் இந்த கிராமத்தில் படிக்கும் மாணவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வருவதற்கும், மருத்துவமனைக்கு சென்று வருவதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே வழி தடம் எண் 21, அரசு பேருந்தை ஒவ்வொரு முறையும் ராமாபுரம் வரை வந்து செல்ல அரசு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால் நாங்கள் பேருந்து ராமாபுரம் வந்து செல்ல இந்த சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ராமாபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் சுமார் 200 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இத்தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜா போலீசார் அந்த கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வாக்குறுதி அளித்து சமரசம் செய்து பொது மக்களை அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.