இறால் மீன்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய கோரிக்கை
தடைகாலத்திற்கு பின்பு கடலுக்குள் சென்று பிடித்து வந்த இறால் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்..
HIGHLIGHTS
தடைகாலத்திற்கு பின்பு கடலுக்குள் சென்று பிடித்து வந்த இறால் மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் இராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மீன்பிடி தடைகாலத்திற்கு பின் இராமேஸ்வரம் மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து 800க்கும் மேற்பட்ட விசைப்படகில் 3500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். பெரும்பாலானவர்களுக்கு அதிகப்படியான மீன்கள் கிடைத்தன. ஆனாலும் அதிகம் சிரமப்பட்டு பிடித்து வரக்கூடிய இறால் மீன்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் 600 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வந்த இறால் மீன்களின் விலை இன்று 300 ரூபாய்க்கும் குறைவாகவே தனியார் ஏற்றுமதியாளர்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் பிடித்து வரக்கூடிய மீன்களுக்கு தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என இராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.