ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முத்தரையர் இன மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழாவில் முத்தரையர் சமுதாயம் புறக்கணிக்கப்படுவதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா வருடந்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 849-வது ஆண்டாக அனுசரிக்கப்படுகிறது. இதன் முதற்கட்ட நிகழ்வாக நேற்று முன்தினம் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஆண்டுதோறும் இந்த சந்தனக்கூடு திருவிழா நடைபெறும் பொழுது ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் ஒவ்வொரு முறைகள் வழங்கப்பட்டு வருவது காலம் காலமாக இருந்ததாகவும், அதில் முத்தரையர் சமுதாயத்தினருக்கு சந்தனக்கூடு திருவிழாவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி மற்றும் சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ள அந்த முக்கிய நாளில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடை இழுத்து வந்ததாகவும், தற்போது இந்த ஆண்டு புதுமுறையாக மாற்று சமுதாயத்தினருக்கு இந்த நிகழ்வை வழங்கியதால் கொந்தளித்த இவர்கள் விழா நடைபெறும் பொழுது தடுக்க முற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பின்னர் கீழக்கரை வட்டாட்சியர் தலைமையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையின்போது விழா முடிந்தவுடன் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த முறையை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண்கள் உட்பட சுமார் 1000த்திற்கும் மேற்பட்டோர் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சமாதானமடைந்து அவர்கள் கலைந்து சென்றனர்.