இரவு நேர ஊரடங்கால் வெறிச்சோடிய இராமநாதபுரம் மாவட்டம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமலானதால், இராமநாதபுரம் மாவட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.
HIGHLIGHTS
இராமநாதபுரம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குவது ராமேஸ்வரம். இங்கு அதிகளவு உணவகங்கள், தங்கும் விடுதிகள், கடைகள் செயல்பட்டு வருகின்றன. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இரவு 10 மணிக்குள் கடைகளை அடைக்குமாறு போலீசார் ரோந்து வாகனங்களில் சென்று அறிவுறுத்தினர்.
அதன் அடிப்படையில் 10 மணிக்கு முன்னதாகவே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் காணப்படும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகம், திட்டக்குடி, ராமேஸ்வரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. இரவு நேர ஊரடங்கின் போது தனியார் வாகனங்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை விதிக்க்கப்பட்டதால் பொதுமக்கள் பேருந்துகளில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு ஊரடங்கையொட்டி பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலைகளில் சுற்றித் திரியும் நபர்களை அறிவுறுத்தி வீடுகளுக்கு திருப்பி அனுப்பினர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லக்கூடிய நபர்கள் மற்றும் இரவு பணிக்கு செல்வோர்களின் அடையாள அட்டையை சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு ஊரடங்கு காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்ட எல்லை பகுதிகளில் 5 சோதனைச் சாவடிகள் அமைத்து அத்தியாவசிய தேவைகள் இன்றி வரக்கூடிய நபர்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவித்தார்.