இராமநாதபுரத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான வைர கற்கள் பறிமுதல்
இராமநாதபுரத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான வைர கற்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS
இராமநாதபுரம் பழைய பேரூந்து நிலையம் அருகே கீழக்கரை செல்லும் சாலையில் இராமநாதபுரம் டவுண் காவல் நிலைய ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் போலீசாரை கண்டதும் ஓட முயன்ற நபரை பிடித்து கையில் வைத்திருந்த துணிப்பையை ஆய்வு செய்ததில், சிறிய அளவிலான எடைபோடும் இயந்திரம், இரண்டு பிளாஸ்டிக்கவரில் சிறிய அளவிலான கற்கள் மற்றும் வைர கற்களா என கண்டறிவதற்கான இயந்திரமும் இருந்துள்ளது. போலீசார் விசாரித்த போது தாம் கீழக்கரை புது தெருவை சேர்ந்த முகமதுகாசிம் மகன் யூசுப்சுலைமான் (வயது 36,) என தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக்கவரில் உள்ளது பற்றி கேட்டதற்கு பட்டை தீட்டாத வைர கற்கள் என்றும் தான் வைர வியாபாரி என்றும் கூறியுள்ளார். வைரகற்கள் எப்படி வந்தது என விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான வகையில் தகவல்களை கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடமிருந்த பட்டை தீட்டப்படாத 160.8கிராம் எடையுள்ள வைரம் மற்றும் எடைபோடும் இயந்திரங்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து உரிய ஆவணங்களை கொடுத்து பெற்றுக் கொள்ளுமாறு அனுப்பியுள்ளனா்.
'பட்டை தீட்டாத வைரம் எப்படி வந்தது. யாருக்கு கொண்டு செல்ல எடுத்து வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வைரத்தின் மதிப்பு சுமார் 1.5 கோடிக்கு மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.