இராமேஸ்வரத்தில் மீனவர்களின் சாலை மறியல் போராட்டம் வாபஸ்
இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை நடத்த இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ். ஆட்சியர் பேச்சுவார்த்தையில் முடிவு.
HIGHLIGHTS
இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை நடத்த இருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ். மீனவர்கள் சங்க நிர்வாகிகள், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு அந்நாட்டு சிறையில் வாடும் 32 தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி நாளை தங்கச்சிமடத்தில் சாலைமறியல் போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று 19 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத்துடன் இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மீனவர்கள் முடிவெடுத்தனர்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில்: இலங்கை சிறையில் தவிக்கும் எஞ்சிய மீனவர்களையும் விடுதலை செய்து, படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளனர். அதேபோல் இந்த மீன்பிடி தடை காலத்தில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை கைது செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.