/* */

கிடாரம்பட்டியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம் அதே இடத்தில் இயக்க விவசாயிகள் கோரிக்கை..!

புதுக்கோட்டை அருகே கடந்த ஒரு மாத காலமாக நேரடி கொள்முதல் நிலையம் இயங்காததால் விவசாயிகள் அவதி. 500 மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யாமல் தேங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனை.

HIGHLIGHTS

கிடாரம்பட்டியில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையம் அதே இடத்தில் இயக்க  விவசாயிகள் கோரிக்கை..!
X

புதுக்கோட்டை மாவட்டம் கிடாரம் பட்டியில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த பகுதியில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் கிடாரம்பட்டி கம்மங்காடு உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற்று வந்தனர். மேலும் ரூ 50 லட்சம் மதிப்பில் நெல் குடோன் கட்டுவதற்கு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் தற்போது கோடை சாகுபடி செய்த விவசாயிகள் நன்கு விளைந்து இருந்த நெல்லை அறுவடை செய்து விவசாயிகள் கிடாரம்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது கொள்முதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 15 தினங்களாக 500 நெல் மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடக்கிறது இதனால் விவசாயிகள் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் கொள்முதல் நிலையம் இன்று திறக்கப்படுவதாக இருந்தது ஆனால் ஒரு சிலர் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக கொள்முதல் நிலையத்தை திறக்க விடாமல் தடுத்துள்ளனர்.

இதனால் கொள்முதல் நிலையத்தில் தங்கள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் என்ன செய்வது அறியாது திகைத்து உள்ளனர். தற்போது இயங்கி வரும் கொள்முதல் நிலையம் அனைத்து கிராமங்களுக்கும் மையப் பகுதியாக இருப்பதால் வேறு இடத்திற்கு கொள்முதல் நிலையத்தை மாற்ற கூடாது அதே இடத்தில்தான் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு நேரடி கொள்முதல் மையத்தை அதே இடத்தில் திறப்பதற்கும் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 11 Jun 2021 11:53 AM GMT

Related News