பெரம்பலூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 220 மனுக்கள்
பெரம்பலூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 220 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 220 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடைய பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. லலிதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ம.பாரதிதாசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ்.சரவணன் உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.