மதுரகாளியம்மன் திருக்கோவில் ஆடி முதல் வெள்ளி, பெளர்ணமி சிறப்பு பூஜை
பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் திருக்கோவில் ஆடி முதல் வெள்ளி, பெளர்ணமியை ஒட்டி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
HIGHLIGHTS
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் அமைந்துள்ளது அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோவில் .இத்திருக்கோவில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது. சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற தலமாக விளங்குகிறது.
கணவனை கொன்ற குற்றத்திற்காக மதுரையை எரித்த கண்ணகியின் சினம் தணித்த புண்ணிய பூமியாக விளங்குகிறது. சிறுவாச்சூரில் கண்ணகியே மதுரகாளியம்மனாக அருள்புரிவதாக தெரிவிக்கின்றனர். திங்கள் மற்றும் வெள்ளி அமாவாசை, பெளர்ணமி ஆகிய தினங்களில் மட்டும் இத்தலத்தில் மதுரகாளியம்மன் அருள் புரிவதாகவும், மற்ற நாட்களில் அருகில் உள்ள பெரியசாமி மலையில் அம்மன் பக்தர்களுக்கு அருள் புரிவதாக தெரிவிக்கின்றனர்.
இதனிடையே கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருக்கோவில்கள் திறக்கப்படுவதால் ஆடி முதல் வெள்ளி மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் நீண்ட கால நேர்த்திக்கடனை செலுத்தவும், பக்தர்கள் மதுரகாளி அம்மனை தரிசித்து மாவிளக்கு போடுதல், மொட்டை அடித்தல், காது குத்துதல் ஆகிய சுப நிகழ்ச்சிகளும்நடைபெற்று வருகிறது.
அம்மனுக்கு இன்று பால், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், பன்னீர். திரவிய பொடி ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது பின்னர் அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு உச்சிகால பூஜைகளுக்கு பிறகு தீபராதனை நடைபெற்றது. அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிகளின் படி பக்தர்கள் முககவசம் அணிந்து கிருமி நாசினி தெளிக்கப் பட்டு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்த அருள்மிகு மதுரகாளியம்மனை பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.