சொந்த செலவில் வடிகால்களை சீரமைக்கும் கிராம மக்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் சொந்த செலவில் வடிவாய்க்கால்களை கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனர்.
கடந்த பிப்.10 ம் தேதி அன்று விஸ்வகுடி நீர்த்தேக்கத்தில் இருந்து மர்ம நபர்கள் சிலர் இரவில் மதகை திறந்து விட்டதை கண்டித்து மறுநாள் காலை அன்னமங்கலம் கிராம பொதுமக்கள் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டு நீர்த்தேக்கத்தில் இருந்து அன்னமங்கலத்திற்கு வருகின்ற வடிகால்களை புனரமைத்து பாசன பயன்பாட்டிற்கு வழங்கிட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
வாய்க்கால் பணியை எப்போது துவங்குவது இதற்கான மதிப்பீடு என எதையும் அதிகாரிகள் தெரிவிக்காததால் 7 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டும் நீர்த்தேக்கம் அமைக்கும் போதே வாய்க்கால்கள் சீரமைக்கப்படும் என இதே பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு அந்த வாக்குறுதியும் மறந்து தற்போது வரை வாய்க்கால்கள் சீரமைக்கப்படாமல் இருப்பது குறிப்பிடதக்கது.
ஆனால் இந்த முறை அன்னமங்கலம் கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற விடாமுயற்சியில் களம் இறங்கி அவ்வூர் பொதுமக்களே இணைந்து கிராம நிர்வாகத்திடம் பணிகளை துவங்க அனுமதி கேட்டும் ஊராட்சி தலைவர் நிர்வாகத்திடம் நிதி இல்லை என மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் போராடி நேற்று நண்பகலில் வாய்க்கால்களை புனரமைக்கும் பணியை சொந்த செலவில் செய்து வருகின்றனர்.
அரசு செய்திருக்க வேண்டிய பணிகள் என்றாலும் காலதாமதம் ஏற்பட்டால் இந்த ஆண்டும் பாசனம் ஏமாற்றம் அளித்து விடும் என்பதாலேயே சிரமம் பார்க்காமல் அவ்வூர் பொதுமக்கள் முனைப்புடன் வாய்க்கால்களை சீரமைத்து பாசனத்திற்கு தண்ணீரை கொண்டே வந்தாக வேண்டும் என களம் இறங்கி இருக்கிறார்கள்.