நாகை மாவட்டம் திட்டச்சேரியில் தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. கவுன்சிலர்
திட்டச்சேரி பேரூராட்சியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்.
HIGHLIGHTS
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் 8-வார்டுகளையும், தி.மு.க. 4 வார்டுகளையும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் 2 வார்டுகளையும், அ.தி.மு.க. 1 வார்டையும் கைப்பற்றியது.
இந்த நிலையில் நேற்று காலை 15-வார்டு களைச் சேர்ந்த வேட்பாளர்களும் பேரூர் மன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனிடையே திட்டச்சேரி பேரூராட்சியில் 15 வார்டுகளில் நடந்த முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 14 ஆவது வார்டில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று இன்று பொறுப்பேற்ற கவுன்சிலர் கஸ்தூரிகலியபெருமாள் பொறுப்பேற்ற சில மணிநேரத்தில் தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தார். நாளை பேரூர் மன்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்து இருப்பது குறிப்படத்தக்கது.