நாகையில் நிவாரணம் வழங்க வேண்டும் என இசை கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை
கொரோனா பரவல் காரணமாக சுப நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், நாகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது, நிவாரணம் வழங்கி உதவிட வேண்டும் என ஆலயத்தில் வாத்திய கருவிகளை இசைத்து அரசுக்கு கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர்
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா 2, வது அலை வீச தொடங்கியுள்ளதால், மக்கள் அதிகளவில் கூடும் சுப நிகழ்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தற்போது கோவில் திருவிழாக்கள் ரத்து, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்த கடும் கட்டுப்பாடு காரணமாக நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டது.
கொரோனா கட்டுபாடுகள் விதிப்பதற்கு முன்பாக நிச்சயம் செய்யப்பட்டு சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் நடைபெற இருந்த திருமணங்களுக்காக மங்கள வாத்தியங்கள் இசைக்க இக் கலைஞர்களுக்கு முன்பணம் கொடுத்து புக் செய்தவர்கள் அரசு விதித்துள்ள கெடுபிடி காரணமாக அதனை ரத்து செய்து தாங்கள் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திரும்ப பெறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் நாகை மாவட்டம் வேதாரண்யம். கீழ்வேளுர் திருப்புகலூர். நாகை. சிக்கல் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இசையால் மற்றவர்களை மகிழ்வித்த இசைக்கலைஞர்களின் கொரானா ஊரடங்கு உத்தரவால் ஒடுங்கிப்போய் தற்போது வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர்.
எனவே வருமானம் இழந்து தவிக்கும் மங்கள இசை கலைஞர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று நாகை அடுத்துள்ள பாலையூர் சிவன் கோவிலில் நாதஸ்வரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் வாத்திய கருவிகளை இசைத்து, அரசின் செவிகளுக்கு எட்டும் வகையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலையின்றி தவித்து வரும் நாதஸ்வர தவில் இசைக்கலைஞர்களுக்கு கொரோனா கட்டுப்பாடு காலம்வரை மாதம் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாகை மாவட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் இசை கலைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.