நாகை துறைமுகத்தில் பழுது நீக்கம் செய்யப்பட்ட படகு கவிழ்ந்து ஒருவர் பலி
நாகை துறைமுகத்தில் பழுது நீக்கம் செய்யப்பட்ட படகு கவிழ்ந்து ஒருவர் பலியானார். மேலும் இருவர் காயம் அடைந்தனர்.
HIGHLIGHTS
நாகப்பட்டினம் துறைமுகம் தோணித்துறையில் உள்ள படகு பழுது நீக்கும் இடத்திலிருந்து சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு கடந்த சில வாரங்களுக்கு முன் பழுது நீக்கம் செய்ய கரையில் ஏற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் படகு பழுது நீக்கும் பணி நிறைவு பெற்றதால் இன்று காடம்பாடி சுனாமி குடியிருப்பு சவேரியார் கோவில் பகுதியை சேர்ந்த தோமஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் விசைப்படகினை கரையிலிருந்து ஆற்றில் இறக்கும் பணியை மேற்கொண்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக விசைப்படகு பக்கவாட்டில் சாய்ந்தது. இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தோமஸ், கடலூரை சேர்ந்த திருசெல்வம், ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்த ஆதி நாராயணன் ஆகியோர் விசைப்படகின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து உடனடியாக பொக்லின் இயந்திர உதவியுடன் படகின் அடியில் இருந்த 3 வரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் தோமஸ் உயிரிழந்ததாக தெரிவித்தனர் . மேலும் திருச்செல்வம், ஆதிநாராயணன் ஆகியோருக்கு நாகை மருத்துவ கல்லூரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாகப்பட்டினம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.