ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள்: தேர்தல் பார்வையாளர் ஆய்வு
உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு தேவையான அச்சுப் பணிகள் நடைபெறும் அரசு கூட்டுறவு அச்சகத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்
HIGHLIGHTS
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தேர்தல் பார்வையாளர் வே.அமுதவள்ளி ஆய்வு மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்கு தேவையான அச்சுப் பணிகளை மேற்கொள்ள உள்ள அரசு கூட்டுறவு அச்சகத்தை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களான பொன்னேரிக்கரை அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, ஏனாத்தூர் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஸ்ரீபெரும்புதூர், தண்டலம் ஊராட்சியில் உள்ள வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரிகளுக்கு நேரில் சென்று ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், மாவட்ட தேர்தல் பார்வையாளர் வே.அமுதவள்ளி தலைமையில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி பங்கேற்று, அரசு உயர்நிலை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்..சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பி.ஸ்ரீதேவி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.