ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்க 4 தனிப்படைகள் - ரயில்வே காவல் உதவி ஆணையர்
ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி ஆணையர் தெரிவித்தார்.
HIGHLIGHTS
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் அரக்கோணம் கோட்ட ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி ஆணையர் ஏ.கே.பிரிட் காஞ்சிபுரம் புறக்காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பணிபுரியும் காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ரயில் நிலையம் முன்புறத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில்களில் கஞ்சா மற்றும் அரிசி கடத்தலை தடுக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அனைத்து ரயில்களிலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அரக்கோணத்தில் 8 கிலோ, ஜோலார்பேட்டையில் 16 கிலோ, காட்பாடியில் 46 கிலோ உட்பட மொத்தம் 70 கிலோ கஞ்சா ரயிலில் கடத்தி வரப்பட்டது தெரிய வந்து அவற்றை பறிமுதல் செய்திருப்பதுடன் 3 பேரையும் கைது செய்துள்ளோம்.
ரயிலில் கஞ்சா அல்லது அரிசி கடத்துவது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் ஒரு கிலோ கஞ்சா ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது. அதே கஞ்சா கேரள மாநிலத்தில் ஒரு கிலோ ரூ.ஒரு லட்சமாகவும் விற்பனையாகிறது. ஆந்திரா, கர்நாடகா பகுதியிலிருந்து தமிழகம் வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவது தெரிய வந்திருப்பதால் தான் 4 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
தமிழக போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் ரயில்வே காவல்துறையினருடன் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள பழைய,புதிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு கருதி 24 ரகசிய கேமராக்களும் விரைவில் பொருத்தப்பட இருப்பதாகவும் கூடுதலாக 5 காவலர்களை நியமிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பேட்டியின் போது ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சத்திரிமார்க்கும் உடன் இருந்தார்.