மாஜி அமைச்சர் வீட்டுக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஏமாற்றம்- காரணம் இதுதான்
சென்னையில், முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் வீட்டுக்கு சோதனைக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
HIGHLIGHTS
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீடு மற்றும் அலுவலகங்கள் என அவருக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக, முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான சென்னை அடையாறு காந்திநகர் இரண்டாவது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு, இன்று காலை 6:30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறையின் டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் சோதனைக்கு வந்திருந்தனர்.
அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள, கே.பி. அன்பழகனுக்கு சொந்தமான வீட்டிற்கு சோதனைக்கு சென்றபோது, முன்னாள் அமைச்சருக்கு தொடர்பில்லாதவர்கள் அங்கு இருந்தனர். இதனால், போலீசார் குழப்பமடைந்தனர். விசாரித்ததில், சம்பந்தப்பட்ட வீடு, கே.பி. அன்பழகனுக்கு சொந்தமானதுதான் என்றும், அவர் வீட்டினை சிவகுமார் கன்ஸ்ட்ரக்ஷன் என்னும் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால், டி.எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அங்கு சோதனை எதுவும் நடத்தாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.