Begin typing your search above and press return to search.
பெட்ரோல் பாம் வீசி ரவுடிகள் மோதல் : போலீசார் ரவுடிகளை பிடித்தனர்
தேனாம்பேட்டை அருகே ரவுடிகள் பெட்ரோல் பாம் வீசி கொண்டு மோதலில் ஈடுபட்டனர். அவர் களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
HIGHLIGHTS
சென்னை தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(எ)தீஞ்ச சதீஷ் மற்றும் சுரேஷ்(எ)காளை இருவரும் நண்பர்கள். இருவர் மீதும் பல குற்ற வழக்குகள் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள நிலையில் சிறு வயதிலிருந்தே இரு தரப்பினருக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு சுரேஷ் என்கின்ற காளை தேனாம்பேட்டையில் ஆட்டோவில் சென்றபோது சதீஷ் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து சுரேஷை அரிவாளால் வெட்டியுள்ளார்.
இதற்கு பழி தீர்க்க சுரேஷ் திட்டமிட்டு சதீஷீக்கு மதுவிருந்து வைப்பதாக கடந்த 7ம் தேதி கண்ணகி நகர் வரவைத்து சுரேஷின் நண்பர்களுடன் சேர்ந்து சதீஷை சரமாரி வெட்டியுள்ளார். அங்கிருந்து தப்பி ஓடிய சதீஷ், சுரேஷை பழி தீர்க்க திட்டம் தீட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் உள்ள சுரேஷின் உறவினர் வீடு ஒன்றுக்கு பெட்ரோல் பாம் வீசிவிட்டு பின்னர் அதிகாலை 3 மணியளவில் கண்ணகிநகர் எழில் நகரில் உள்ள சுரேஷ் என்கின்ற காளை வீட்டிற்கு வந்த சதீஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் சுரேஷ் வீட்டின் முன்பு பெட்ரோல் பாம் வீசிவிட்டு சுரேஷின் மனைவி சாந்தி கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்ணகிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தேனாம்பேட்டை சேர்ந்த சதீஷ்-சுரேஷ் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பழி தீர்க்க மாறி மாறி தாக்கிகொண்டதை அறிந்த போலீசார் தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசாரிடம் சதீஷை பிடிக்க தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து சதீஷை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர். கண்ணகிநகருக்கு வர வைத்து வெட்டிய வழக்கில் சுரேஷை போலீசார் கைது செய்தனர்.
தேனாம்பேட்டை மற்றும் கண்ணகிநகர் காவல் நிலையங்களில் சதீஷ் மற்றும் சுரேஷ் இருவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதில் இரு தரப்பிலும் தொடர்புடைய நபர்களையும் தேடி வருகின்றனர்.