ரயிலிருந்து தவறி விழுந்த இளைஞரை மீட்பு-மருத்துவமனையில் சிகிச்சை
ரயிலிலிருந்து தவறி விழுந்த இளைஞரை மீட்டு 2 கி,மீட்டர் தூரம் தூக்கி வந்து மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
HIGHLIGHTS
அரியலூர் அருகே ரயிலிருந்து தவறி விழுந்த இளைஞரை கிராம மக்களின் உதவியுடன் சுமார் 2கி.மீட்டர் தூக்கி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.
அரியலூர் அடுத்த ஓட்டகோவில் ரயில்வே கேட் அருகே, ரயிலில் பயணித்த இளைஞர் ஒருவர் தவறி கீழே விழுந்து, உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக அரியலூர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தலைமை காவலர் சுகுமார் மற்றும் காவலர் ராமச்சந்திரன் ஆகிய இருவரும், ஆம்புலன்ஸ் செல்ல இயலாத அந்த இடத்திலிருந்து அப்பகுதி மக்களின் உதவியுடன் இளைஞரை சுமார் 2 கி.மீட்டர் தூரம் தூக்கி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் அந்த இளைஞர் யாரென போலீசார் விசாரணை மேற்கொண்டதில், புலியூரை சேர்ந்த மேகவர்ணன்(32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.