சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம், இருசக்கர வாகனப்பேரணியை அமைச்சர் சிவசங்கர் தொடக்கி வைத்தார்.
HIGHLIGHTS
அரியலூரில் போக்குவரத்துத்துறை சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மற்றும் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டம் மற்றும் இருசக்கர வாகனப்பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இந்த மாரத்தான் ஓட்டம் மற்றும் இருசக்கர வாகனப்பேரணி, ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலை, செந்துறை பிரதானச் சாலை வழியாகச் சென்று, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. இதில் சாலை பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட கலெக்டர்பெ.ரமண சரஸ்வதி, எம்எல்ஏக்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், வட்டார போக்குவரத்து அலுவலர் ப.பிரபாகர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.