அலட்சியமாக வெளியே சுற்றும் பொதுமக்கள்
கொரோனா கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தி இருசக்கர வாகனத்தில் பொதுமக்கள் சுற்றிவருவதால் கொரோனா அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது
HIGHLIGHTS
அரியலூர் நகரில் கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தி திரளான பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றிவருவதால் கொரோனா அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா தொற்று, கடந்த ஒருவாரமாக மீண்டும் அதிகரிக்க கொடங்கியுள்ளது. நேற்று மட்டும் 112 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 400க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்றுமுதல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரியலூர் நகரில் அனைத்து கடைகளிலும் காலை முதலே வியாபாரம் நடைபெற்றது. இதனால் திரளான பொதுமக்கள் கடைகளில் கூடி பொருள்களை வாங்கிச் சென்றனர். கடைத்தெருவில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து கோட்டாச்சியர் ஏழுமலை தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் சென்று ஒலிபெருக்கி மூலம் கடைகளை அடைக்க உத்திரவிட்டனர். கடைகள் அடைக்கப்பட்ட போதிலும், இருசக்கர வாகனத்தில் கடைத்தெருவில் குவிந்த பொதுமக்கள் கொரோனா பயமில்லாமல் அலட்சியத்துடன் ஊரைச் சுற்றி வந்தனர். இதனால் கொரோனா அதிக அளவில் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.