தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி அரியலூர் கலெக்டரிடம் மனு
அரியலூரில் பணியாற்றும் தினக்கூலி தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு 2022_ 2023 ஆம் நிதி ஆண்டிற்கு தினக்கூலி நிர்ணயம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் . அதில் துப்புரவு பணியாளர்களுக்கு தின கூலியாக நாளொன்றுக்கு ரூ. 307 மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக அரசின் தொழிலாளர் ஆணையர் (சென்னை), 22/4/2021 தேதிய கடிதம் மூலம் தொழிலாளர் துறையால் 1948 ஆம் வருட குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறைவில்லாமல் தினக்கூலி நிர்ணயம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் தினக்கூலி நிர்ணயம் செய்து மாவட்ட ஆட்சியர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக துப்புரவு பணியாளர்களுக்கு (நகராட்சி, பேரூராட்சி) திருப்பூர் மாவட்ட கலெக்டர் நிர்ணயத் தினக்கூலி ரூபாய் 593 ,ரூபாய் 516, கோயமுத்தூர் மாவட்ட கலெக்டர் ரூபாய் 606ரூபாய் 529,ஈரோடு மாவட்ட கலெக்டர் ரூபாய் 592 ,ரூபாய் 515, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ரூபாய் 650 என நாள் கூலி நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறான அரசின் வழிகாட்டுதலை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மிகக் குறைவான தினக்கூலியாக ரூ. 307 என அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளதை மறுபரிசீலனை செய்து தின கூலியை முறைப்படுத்தி உயர்த்தி வழங்கிட வேண்டுமாறு உள்ளாட்சித் துறை பணியாளர் சம்மேளன மாநில செயலாளரும், உள்ளாட்சி ஏ.ஐ. டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளருமான தண்டபாணி சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரமண சரஸ்வதியை நேரில் சந்தித்து ஆவணங்கள் அடங்கிய மகஜரை கொடுத்து, விளக்கம் அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி சில விவரங்களைச் சொல்லி மனுவை பரிசீலிப்பதாக கூறினார்.
இதோடு மேலும் அரியலூர் ஒன்றியம், கயர்ளாபாத் கிராமத்தில் பல வருடங்களுக்கு முன்பு பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் கிடக்கும் பொது சுகாதார கழிப்பறை கட்டிட வசதியை உடன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதோடு, அரியலூர்/ கல்லங்குறிச்சி சாலையில் சென்று வரும் அரசு பேருந்துகளை அருகில் உள்ள கயர்லாபாத், கோனேரி ராயபுரம் கிராமத்தின் வழியாக சென்று வர செய்திடவும், கயர்லாபாத் கிராமத்தில் சாலையை செப்பனிடவும் தெருவடிகால் வசதி, மின்விளக்கு வசதி போன்றவைகள் அடங்கிய மனுவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கயர்லாபாத் கிளை சார்பாக செயலாளர் டி. ராயதுரையால் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.
கருப்பிலா கட்டளை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் கோரிக்கைகளும் ஏ. ஐ.டி. யு.சி. தொழிற்சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியிடம் மனு அளிக்கப்பட்டது.