1.6 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி, துவக்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்
அரியலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 60 ஆயிரம் மரக்கன்றுகள் ஒரே நாளில் நடும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை மணக்கால் ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று துவக்கி வைத்தார். கலெக்டர் ரமண சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
இது குறித்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தை பசுமையாக்கிடும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில், அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில் மியவாக்கி முறையில் குருங்காடுகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், அரியலூர் மாவட்டம் முழுவதும் பசுமையாக்கும் நோக்கில் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களின் வளாகங்கள், புறம்போக்கு நிலங்கள், கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான மேய்ச்சல் நிலங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுப்படுவதை தவிர்க்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அரசுக்கு சொந்தமான இடங்கள், புறம்போக்கு இடங்கள் உள்ளிட்ட இடங்களில் 1 இலட்சம் மரக்கனறுகள் மற்றும் ஒன்றியத்திற்கு 10,000 வீதம் 60,000 பனைமர விதைகள் என 1,60,000 மரக்கன்றுகளை 10,000 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களைக் கொண்டு தேக்கு, இலுப்பை, நாவல், புங்கன், வேம்பு, ஆலமரம், அத்தி, கோவாப்புல் உள்ளிட்ட மரக்கன்றுகள் இன்றே நட்டு முடிக்கப்படவுள்ளன.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலும் மரங்களை வளர்த்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரியலூர் மாவட்டத்தை பசுமையாத்திடும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சசுந்தர்ராஜன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் சந்திரசேகர், கால்நடைப்பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஹமீதுஅலி, வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா, மணக்கால் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.