47 தேர்வுக் கூடங்களில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II, IIA தேர்வு
அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II, IIA தேர்வினை 13,122 தேர்வாளர்கள் எழுத உள்ளனர்.
HIGHLIGHTS
இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-II, IIA தேர்வுகள் நாளை சனிக்கிழமை முற்பகல் மட்டும் அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் ஆகிய 4 வட்டங்களிலும் 47 தேர்வுக் கூடங்களில் நடைபெறுவதுடன், இத்தேர்வினை 13,122 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் இத்தேர்வினை கண்காணிப்பிற்காக துணை ஆட்சியர் நிலையில் 4 பறக்கும் படை அலுவலர்கள், 8 இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர் / உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட 80 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் தேர்வு பாதுகாப்பு பணிக்கு காவலர் / ஆயுதம் ஏந்திய காவலர்களும் அரியலூர் மாவட்டம் முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். தேர்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வழிக்காட்டுதலின்படி, தேர்வாளர்கள் குறித்த நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வருகை தர வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.