அரியலூரில் தேசிய ஊட்டச்சத்து மாத உணவு பொருள் கண்காட்சி துவக்கி வைப்பு
அரியலூரில் தேசிய ஊட்டச்சத்து மாத உணவுப் பொருள் கண்காட்சியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத உணவுப் பொருள் கண்காட்சியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1 முதல் 30-ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் "ஊட்டச்சத்து மாத விழாவிற்காக ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல்" என்ற தலைப்பில் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத உணவுப் பொருள் கண்காட்சியினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்துவக்கி வைத்து பார்வையிட்டார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த ஊட்டச்சத்து உணவுப் பொருள் கண்காட்சியில் 0-5 வரை குழந்தைகளின் சராசரி எடை மற்றும் உயரம், இரத்த சோகை, சக்தி தரும் உணவுகள், வளர்ச்சி தரும் உணவுகள், சாப்பிடக்கூடிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள், சத்தான உணவுகள், சத்தான காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஊட்டச்சத்து தகவல்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் ஊட்டச்சத்து உணவுகள் குறுத்த தகவல்களும் இக்கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. மேலும், இரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சார வாகனம் துவக்கி வைக்கப்பட்டு, இவ்வாகனம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேரடியாக சென்று இரத்த சோகையால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பெற்று நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, துணைத்தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கோ.அன்பரசி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ப.பாலசுப்பிரமணியன், மாவட்ட திட்ட உதவியாளர் அ.சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.