தோட்டக்கலை சார்பில் சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி
கீழப்பழூரில் தோட்டக்கலை சார்பில் பூ அலங்காரம் செய்தல், தேனீ வளர்ப்பு சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
HIGHLIGHTS
இதுகுறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
அரியலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அரசு தோட்டக்கலைப் பண்ணை கீழப்பழூரில் சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
கீழப்பழூரில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அரசு தோட்டக்கலைப் பண்ணை செயல்படுகிறது. இதில் பழக்கன்று, காய்கறி நாற்றுகள், மண்புழு உரம், ஜாம் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பழப்பண்ணையில் நிலமில்லா விவசாய தொழிலாளர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் வகையில், 40 நபர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதில் பூங்கொத்து மற்றும் பூ அலங்காரம் செய்தல், தேனீ வளர்ப்பு மற்றும் நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவுதல், பராமரித்தல் ஆகியவற்றை அடங்கிய 30 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புவோர் தோட்டக்கலைத்துறையின் இணையத்தளத்தில் (www.tnhorticulture.tn.gov.in) இடம் பெற்றுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 23.05.2022-க்குள் சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு 30 நாட்களுக்கு போக்குவரத்து செலவுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.100 அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த வாய்ப்பை நிலமில்லா விவசாயிகள் படித்த, படிக்காத இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.