அரியலூரில் நீட்தேர்வுக்கு பயந்து மாணவி தூக்கிட்டு தற்கொலை
இந்தியா முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், பயம் காரணமாக அரியலூர் மாணவி நிஷாந்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
HIGHLIGHTS
இந்தியா முழுவதும் நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், அத்தேர்வுக்கு பயந்து அரியலூர் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் நகரில் ரயில்வே நிலையத்திற்கு அருகில் வசிப்பவர் நடராஜன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிஷாந்தி நீட் தேர்வுக்கு இரண்டாம் முறையாக தயார் செய்து வருகிறார். பத்தாம் வகுப்பில் 430 மதிப்பெண்களும், கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பில் 529.5 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி அதில் 236 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
போதிய கட் ஆப் மார்க் பெற முடியாததால் நிஷாந்தின் பெற்றோர் மீண்டும் தேர்வு எழுத அவரை உற்சாகப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து தற்பொழுது நீட் தேர்வுக்கு நிஷாந்தி தயாராகி வந்துள்ளார். ஆனால் வேதியல் மற்றும் உயிரியல் பாடங்களில் அவருக்கு சற்று கடினமாக உணர்ந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
நேற்று இரவு பத்தரை மணி வரை அவரது தாயார் உமா மற்றும் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்த நிஷாந்தி, பின்னர் தான் படிக்க செல்வதாக கூறி வீட்டில் உள்ள அறைக்கு சென்று தாலிட்டுக் கொண்டார். இதனையடுத்து நேற்று இரவு உறங்கி விட்ட அவரது குடும்பத்தினர், அதிகாலை 2 மணி அளவில் அவரது தாயார் உமா எழுந்து பார்த்தபோது நிஷாந்தின் அறையில் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. அறைகதவை தாயார் உமா திறந்து பார்த்தபோது நிஷாந்தி சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு, அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்கொலைக்கு முன்பு நிஷாந்தி தனது தகப்பனாருக்கு அனுப்பி உள்ள ஸ்டேட்டஸில் மிஸ் யூ டாட் என்று அனுப்பி உள்ளார். மேலும் தனது தந்தை மற்றும் தம்பிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாளை நீட் தேர்வு நடைபெறும் நிலையில் அத்தேர்வுக்கு பயந்து அரியலூரில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று நிசாந்தியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நிஷாந்தி எழுதி வைத்த கடிதங்களை பறிமுதல் செய்த போலீசார் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.