அரசு அதிகாரி மனைவி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை
அரசு அதிகாரி மனைவி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வேலாயுதம்நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(55). இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 28.3.2018 அன்று வீட்டில் தனியாக இருந்த இவரது மனைவி ஜெயபாரதி(48)யை, அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி ஜெயந்தி(47), ஒக்கநத்தம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜின் மகன் சின்னராசு(22) ஆகிய 2 பேரும் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 15 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர்.
இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஜெயந்தி மற்றும் சின்னராசு ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, கொலை குற்றவாளிகளான ஜெயந்தி மற்றும் சின்னராசுக்கு ஆயுள் தண்டனையும், மேலும் நகையை கொள்ளையடித்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளிகள் 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.