சபரிமலை மண்டல சீசன் வருவாய் ரூ.78.92 கோடி: 10.35 லட்சம் பக்தர்கள் தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல சீசனையொட்டி வருவாய் ரூ.78.92 கோடியை தொட்டுள்ளது; 10.35 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
HIGHLIGHTS
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல சீசனையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை வரை மொத்த வருவாய் ரூ.78.92 கோடியை தொட்டுள்ளது.
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கே.ஆனந்த கோபன் கூறுகையில், சபரிமலை கோவிலிலிருந்து இதுவரை ரூ.78.92 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீசனில் ரூ.156 கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக ரூ.8.39 கோடியாக குறைந்தது. தளர்வுக்குப்பின் தற்போது வருவாய் அதிகரித்துள்ளது.
அரவணா விற்பனையில் ரூ.31.25 கோடியும், அப்பம் மூலம் ரூ.3.52 கோடி, காணிக்கை சமர்ப்பணம் மூலம் ரூ.29.30 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
மகரவிளக்கு உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மறுநாள் 31ம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஜனவரி 11ம் தேதி எருமேலி பேட்ட துள்ளல் நடைபெறுகிறது. ஜனவரி 12ம் தேதி திருவாபரண ஊர்வலம், ஜனவரி 14ம் தேதி மாலை 6.30க்கு மகர ஜோதி தரிசனம், ஜனவரி 20ம் தேதி காலை 7 மணிக்கு கோவில் மூடப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனவரி 6ம் தேதி எருமேலியில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும் பக்தர்கள் தங்குமிடப் பணிகளை தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.