என் தலையை துண்டித்தாலும் எதிர் முகாமுக்கு செல்ல மாட்டேன்: சஞ்சய் ராவத் கொந்தளிப்பு
என் தலையை துண்டித்தாலும் எதிர் முகாமுக்கு செல்ல மாட்டேன் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கொந்தளித்துள்ளார்.
HIGHLIGHTS
மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் ஆட்சிக்கு எதிராக, சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேர் அசாமில் முகாமிட்டுள்ளனர். ஏக்னாத் ஷிண்டே தலைமையில் முகாமிட்டு இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அடுத்த கட்ட நகர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய சிவசேனா சார்பில் துணை சபாநாயகரிடம் கடிதம் தரப்பட்டது.
இதற்கிடையில், ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் நோட்டீசை எதிர்த்து ஏக்நாத் ஷிண்டே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஜூலை 11 ஆம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது எனவும் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், பணமோசடி வழக்கில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மும்பையில் உள்ள அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு ராவத் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குறிப்பிடுகையில், அமலாக்கத்துறை எனக்கு சம்மன் அனுப்பியிருப்பது எனக்கு இப்போதுதான் தெரியவந்தது. மராட்டியத்தில் மிகப்பெரிய அரசியல் முன்னேற்றங்கள் நடைபெற்று உள்ளன. பாலாசாகேப்பின் சிவசைனிகர்களான நாங்கள், இப்போதைய சூழலில் ஒரு பெரிய போரை நடத்தி கொண்டிருக்கிறோம். இது என்னை தடுக்கும் சதி. நீங்கள் என் தலையை துண்டித்தாலும், நான் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முகாம் செல்ல மாட்டேன். என்னை கைது செய்யலாம் என்று சவால் விடும் வகையில் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.