நடிகை அமலாபால் இரண்டாம் திருமணம் சர்ச்சை..!
நடிகை அமலாபால் இரண்டாம் திருமணம் குறித்து விவகாரம் தற்போது சர்ச்சையாகி வெடித்துள்ளது.
HIGHLIGHTS
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பக்கம் உள்ள பெரியமுதலியார் சாவடி பகுதியில் நடிகை அமலா பாலும் தயாரிப்பாளர் பவிந்தர் சிங்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒரு சில மாதங்கள் ஒன்றாகக் குடியிருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே சொத்துப் பரிவர்த்தனை நடந்த நிலையில், இருவரும் சேர்ந்து சில தொழில்களில் முதலீடும் செய்துள்ளனர். அதன்பிறகு அமலாபால், சில மாதங்களுக்கு முன்பு பவிந்தர் சிங்கிடமிருந்து விலகிவிட்டார்.
இந்தநிலையில், தன்னிடம் பவிந்தர் சிங்கும் அவரது குடும்பத்தினரும் பணம் பெற்றிருந்தனர். அந்தப் பணத்தைக் கேட்டபோது, தானும் பவிந்தர் சிங்கும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவோம் என்று கூறி மிரட்டுவதாக அமலா பால், கடந்தவாரம் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில், டி.எஸ்.பி இருதயராஜ் தலைமையிலான போலீஸார் பவிந்தர் சிங், அவரது தந்தை சுந்தர் சிங் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிந்ததோடு, பவிந்தர் சிங்கை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில்தான், பவிந்தர் சிங்கின் வழக்கறிஞர் பாலாஜி, அவருக்கு ஜாமீன் கோரி விழுப்புரம் மாவட்டம் வானூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணையை மேற்கொண்ட வானூர் நீதிமன்ற நீதிபதி வரலட்சுமி, பவிந்தர் சிங்கிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அந்த உத்தரவின்பேரில் நேற்று முன்தினம் இரவே பவிந்தர் சிங் விடுதலையானார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த வழக்கறிஞர் பாலாஜி, "அமலா பாலும் பவிந்தர் சிங்கும் திருமணம் செய்துகொண்ட விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கிலும் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். அதில் இருந்த உண்மையைத் தெரிந்துகொண்ட நீதிபதி பவிந்தர் சிங்கிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்." என்றார்.
இந்தநிலையில், தனக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவில்லை என்று நடிகை அமலா பால் பேட்டியளித்து வந்திருந்த நிலையில், திருமணச் சான்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதால், உண்மை என்ன என்பதை சொல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளார் அமலா பால்.