மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்
ஜனவரி 29ல் தேனி மாவட்டத்தில் விடுபட்ட தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் வாக்காளார்களுக்கான சிறப்பு முகாம் - மாவட்ட வருவாய் அலுவலர்.
HIGHLIGHTS
தேனி மாவட்டத்தில் விடுபட்ட தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் வருகின்ற ஜனவரி 29ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் -2021 நடைபெற்று, கடந்த ஜனவரி 20ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் 20ஆம் தேதியிலிருந்து வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர 01.01.2021-ஐ தகுதி நாளாகக் கொண்டு தகுதி வாய்ந்த வாக்காளர்கள் மற்றும் விடுபட்ட வாக்காளர்கள் பெரியகுளம் சார் ஆட்சியர், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து நகராட்சி ஆணையர் அலுவலங்களில் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றலுக்கான படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். மேலும் www.nvsp.in என்ற இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் மாவட்டத்தில் விடுபட்ட தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பாக, மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் வருகின்ற ஜனவரி 29ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. எனவே, தகுதி வாய்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் இம்முகாம்களில் மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.