நாகப்பட்டினம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
பிரேக் இன்ஸ்பெக்டர் அறை, கணினி அறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வாகனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது.
HIGHLIGHTS
நாகப்பட்டினம், பால்பண்ணை சேரியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணம் கைமாறுவதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில் டிஎஸ்பி சித்திரவேல் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா ஆகியோர் நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு விரைந்தனர்.
தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் இடைத்தரகர்களை அலுவலகத்திற்குள்ளே இருக்கச் செய்து அலுவலகத்தின் வாயில் கதவு பூட்டப்பட்டு சோதனை நடந்தது அப்போது பிரேக் இன்ஸ்பெக்டர் அறை, கணினி அறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வாகனம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.
இதில், கணக்கில் வராத ரூ.51 ஆயிரத்து 700 லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் உதவியாளர் மூர்த்தி என்பவரது வங்கிக் கணக்கில் இருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கட கிருஷ்ணன் வங்கி கணக்கிற்கு ரூ.30 ஆயிரம் செலுத்தப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.