நரிக்குறவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ.
தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நரிக்குறவர்களுக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. நிவாரண பொருட்களை வழங்கினார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் சாலை மகிமை புரத்தில் சாலையோரம் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு குடியமர்த்தப்பட்ட நாற்பத்தி எட்டு நரிக்குறவர் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் தற்போது சுமார் 200 பேர் வசிக்கின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் தொடர் மழையின் காரணமாக ஜெயங்கொண்டம் அருகே உள்ள கருவாட்டு ஓடையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரமாக தொடர் மழையின் காரணமாக கருவாட்டு ஓடையில் 15 கிராமங்களை கடந்து பொன்னேரியில் கலக்கும் மழை நீரானது சாலையோரம் குடியமர்த்தப்பட்ட நரிக்குறவர்களின் குடிசைகளுக்குள் புகுந்தது.
தகவலறிந்த நகராட்சி ஆணையர் சுபாஷினி, தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் சென்று நரிக்குறவர் குடும்பங்களை அங்கிருந்து அழைத்துச் சென்று அருகே உள்ள மாடர்ன் கல்லூரி வளாகத்தில் முகாம் அமைத்து அங்கு தங்க வைத்தனர். அவர்களுக்கு கல்லூரி சார்பாக உணவு வழங்கப்பட்டது.
வருவாய்த்துறை, நகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள், வேஷ்டி புடவை போர்வை மற்றும் உணவு பொருட்களை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொக.கண்ணன் வழங்கினார். உடன் தி.மு.க நகர செயலாளர் கருணாநிதி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.