'பிட்பி' குறித்து உங்களுக்கு தெரிந்தால், அரசு அதிகாரிகளுக்கு வியர்த்து கொட்டும்
Bitby -'பிட்பி' குறித்து உங்களுக்கு தெரிந்தால், லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் கண்ணில் விரல் விட்டு ஆட்டலாம். அதாவது, அவர்களது ஆட்டத்தை நீங்கள் அடக்கி விடலாம்.
HIGHLIGHTS
Bitby -இன்று நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் ஆபத்தான விஷயங்கள் லஞ்சம், ஊழல். அரசு அதிகாரிகள் துவங்கி, அரசியல்வாதிகள் வரை ஊழல்வாதிகளாக மாறிவிட்டனர். அரசு அலுவலகத்தில் உள்ள பியூனில் துவங்கி இன்றைய சூழலில் கவர்னர் பதவி வரை லஞ்சம் பெருகி விட்டது.
நாட்டின் வளர்ச்சியை கெடுக்கும், சமூக நோயாக புரையோடி போய்விட்ட லஞ்சம், ஊழலை அறிவுரை சொல்லி தடுக்க முடியாது. கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியும் நிறுத்த முடியாது. ஏனெனில், பண பலமும், அதிகார பலமும் மனிதநேயத்தை, மனித தன்மையை இழக்க செய்துவிட்டது. லஞ்சம் வாங்குவோரை, ஊழல் செய்யும் குற்றவாளிகளை கடுமையான சட்டங்களின் மூலமே தண்டித்து திருத்த முடியும்.
நிம்மதியான, சந்தோஷமான, ஆடம்பரமான மனித வாழ்க்கைக்கு தேவைகளும் ஆசைகளும் நிறைய இருந்தும் இன்னும் மனிதன், தன் எல்லை கோட்டை மீறாமல், சமூக கட்டுப்பாட்டுக்குள் அடங்கி, ஒடுங்கி வாழ காரணம், நமது கடுமையான சட்ட திட்டங்கள்தான். சட்டத்துக்கும் தண்டனைக்கும் பயந்துதான் பெரும்பாலான மனிதர்கள் நல்லவர்களாக வாழ்கிறார்களே தவிர, உண்மையாக, யோக்கியமாக வாழ வேண்டும் என்ற நேர்மைத்தனம் பலரிடமும் இல்லை என்பதே கசப்பான உண்மை.
'எந்த குற்றங்களுக்கும் இன்று ஒருநாள் மட்டும் தண்டனை இல்லை' என்று ஒரு அரசு அறிவிப்பு வெளியாகட்டும். ஒரு கற்பனைக்காக தான், மனிதனின் அத்தனை மிருகத்தனங்களும், அந்த ஒரே நாளில் வெளிப்பட்டு விடும். நகைக்கடைகள், துணிக்கடைகள், வங்கிகள், ஏ.டி.எம் கள் அனைத்தும் சூறையாடப்பட்டு விடும். பெண்கள் பலவந்தப்படுத்தபடுவார்கள். கொலைகள் நடக்கும். கலவரம் வெடிக்கும். அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால், அதுதான் உண்மை. ஏனெனில், மனிதனை கட்டுப்படுத்தி சட்டம் - ஒழுங்குக்குள் வைத்திருப்பதால், நாட்டில் அமைதி நிலவுகிறது. வாழ்க்கை நிம்மதியாக கழிகிறது.
ஆனால், இந்த லஞ்சம், ஊழல் மட்டும் வளர்ந்து பெருகி கொண்டே போகிறதே, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால், கோடி, கோடியாய் பெட்டிகளில் பணம் கிடைக்கிறதே, இதை தடுக்க, ஒழிக்க வழியே இல்லையா, என்ற மெகா கேள்வியும் மனதில் எழாமல் இல்லை. அதற்கும் தீர்வு கிடைக்க நீங்கள் 'பிட்பி'யை அணுகினால் போதும். அரசு அதிகாரிகள் ஆட்டம் கண்டுவிடுவர்.
இதுகுறித்து, ஓ.என்.ஜி.சி., கார்ப்பரேட் கம்யூனிகேசன் சமூகவலைதளத்தில் வெளியான விழிப்புணர்வு வீடியோ ஒன்று, தற்போது வைரலாகி வருகிறது.
அரசு அலுவலகத்துக்கு வரும் முதியவரின் விண்ணப்பத்தை ஏற்க மறுக்கிறார் அரசு அதிகாரி ஒருவர். கையெழுத்திட்டு, முத்திரை வைக்க மறுத்து அவரை திருப்பி அனுப்பி விடுகிறார். அந்த முதியவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த சக ஊழியரிடம், ' அப்படியென்ன பேசிக்கிட்டு இருந்தீங்க?' என கேட்கிறார் அதிகாரி. அதற்கு அந்த ஊழியர், 'களி' என்று முதியவர் சொன்னதாக கூறுகிறார். 'ஓ... நான் லஞ்சம் வாங்கினால், ஜெயிலுக்கு போய் களி சாப்பிடுவேன் என்கிறாரா?' என, நக்கலாய் கேட்கும் அதிகாரி, 'வேறென்ன சொன்னார்?' என்க, அதற்கு அந்த ஊழியர் ' என்னவோ, 'பிட்பி'ன்னு சொன்னார்,' என்று அலட்சியமாக பதில் சொல்ல, பதறிப்போன அதிகாரி, வெளியே சென்ற முதியவரை தேடி, அவசரமாக ஓடிச்செல்கிறார். அருகில் நிற்கும் சக ஊழியரின் முதுகில் விண்ணப்பத்தை வைத்து, அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு, சீல் வைத்து தந்து, 'ஐயா, மன்னிச்சிடுங்க, இனிமேல் லஞ்சம் எதுவும் வாங்க மாட்டேன்' என்று சொல்லி அனுப்புகிறார். அருகில் உள்ள சக ஊழியர் 'பிட்பி' குறித்து கேட்க, 'பிட்பி' என்பது, லஞ்சம் குறித்து விசாரிக்கும் அரசு நிறுவனம். இங்கு கடிதம் மூலம் ஆதாரபூர்வமாக புகார் தெரிவித்தால், வேலையே போய்விடும், ' என்று பதட்டமாக கூறுகிறார்.
சமூக சீரழிவுக்கு காரணமான லஞ்சத்தை ஒழிக்க, 'பிட்பி'யில், கடிதம் வாயிலாக புகார் தெரிவிக்கலாம். 'பிட்பி' (PIDPI) என்பது, 'PUBLIC INTEREST DISCLOSURE AND PROTECTION INFORMER RESOLUTION' என்ற அமைப்பு புதுடெல்லியில் உள்ளது. இங்கு, லஞ்சம் குறித்த புகார்களை தெரிவிக்க, கடித உறையின் மேல் பகுதியில், பிட்பி' என குறிப்பிட்டு, செயலாளர், மத்திய விழிப்புணர்வு ஆணையம், சதர்க்தா பவன், பிளாக் ஏ, ஜிபிஓ காம்ப்ளக்ஸ், ஐ.என்.ஏ, புதுடெல்லி - 110 023 என்ற முகவரி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவிசி போர்ட்டலில், ஓ.என்.ஜி.சி சமூகவலைதளங்கள் வாயிலாகவும், கடிதங்கள் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். ஆனால், இமெயில் வாயிலாக அனுப்பும் புகார்கள், ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதர விவரங்களை அறிய, சிவிசி, ஓஎன்ஜிசி சமூகவலைதளங்களை பார்வையிட, அந்த வீடியோ காட்சியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இனி லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளிடம் 'பிட்பி' என்ற வார்த்தையை சொல்லுங்கள்... அவர்கள் 'வெலவெல'த்து போய், வியர்வை வழிய நிற்பதை பார்த்து ரசிக்கலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2