எடப்பாடியில் மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
எடப்பாடியில் மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
HIGHLIGHTS
உலக வெப்பமயம் ஆவதால் ஏற்படும் பருவகால மாற்றத்தால் மாசு அதிகரித்தல், எரிபொருள் தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு போன்ற காரணங்களால் தற்போது மின்சார வாகனங்கள் உற்பத்தியில் மோட்டார் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இரு சக்கரம், மூன்று சக்கரம், நான்கு சக்கர மின்சார வாகனங்களை தயாரித்து அறிமுகப்படுத்தி உள்ளனர். எரிபொருள் செலவு மிச்சம் ஆகும் என்பதால் பொதுமக்களும் ஆர்வத்துடன் இந்த மின்சார வாகனங்களை வாங்கி வருகிறார்கள். அதிலும் நடுத்தர மக்கள் தங்களிடம் இருந்த பெட்ரோல் இரு சக்கர வாகனத்தை மாற்றி விட்டு மின்சார இருசக்கர வாகனத்தை வாங்கி வருகிறார்கள். பல்வேறு நிறுவனங்கள் மின்சார இரு சக்கர வாகனத்தை உற்பத்தி செய்த விற்று வருகிறார்கள்.
இந்த மின்சார வாகனங்கள் அவ்வப்போது தீ பிடிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. மின்சார இருசக்கர வாகனத்திற்கு சார்ஜ் போடும் போதும், சாலையில் சென்று கொண்டிருக்கும் போதும் திடீர் என்று தீ பிடிக்கின்றன. இந்த தீ விபத்தால் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. பெட்ரோல் விலையை விட மின்சார செலவு குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மின்சார இருசக்கர வாகனத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். மின்சார ஸ்கூட்டர் தீ பிடித்த சம்பவம் எடப்பாடி அருகே வியாழக்கிழமை நடந்துள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:-
எடப்பாடியில் நகராட்சி வெள்ளாண்டி வலசு அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவர் மின்சார ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி இருந்தார். சில நாட்களாக அதை பயன்படுத்தி வந்தார். வியாழக்கிழமை அன்று தனது வீட்டில் மின்சார ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டார்.
சார்ஜ் ஏறிய பிறகு சொந்த வேலையாக வெளியே செல்வதற்காக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தார். அப்போதே திடீர் என்று மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது. அதை வரதராஜன் அணைக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. ஸ்கூட்டர் முழுவதும் தீப் பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தார்கள். அவர்களும் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக இதுபற்றி எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து சாம்பல் ஆகிவிட்டது. இது பற்றி தகவல் அறிந்த எடப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த தீ விபத்து பற்றி மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ பிடித்தற்கான காரணம் குறித்து அவர்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.