'கவலைகள் வந்தால், துாங்கி விடுவேன்' - நடிகை சமந்தாவின் 'டெக்னிக்' இது!
'கவலைப்படும் சூழல் வந்தால், அதுபற்றி யோசிக்காமல் துாங்கி விடுவேன்' என்கிறார் நடிகை சமந்தா.
HIGHLIGHTS
தமிழ், தெலுங்கு படவுலகில் முன்னணி கதாநாயகி சமந்தா. சமீபத்தில் வெளிவந்த அவரது படம் 'யசோதா'. விஜய் உடன் 'தெறி'மற்றும் 'மெர்சல்', 'கத்தி' என, மூன்று படங்களில் நடித்திருந்தார். சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஜய் சேதுபதியுடன் 'காத்துவாக்குல ரெண்டு காதல்', நானியுடன் 'நான் ஈ', சூர்யாவுடன் 'அஞ்சான்' மற்றும் '24' அதர்வாவுடன் 'பானா காத்தாடி' மற்றும்' இரும்புத்திரை', தனுஷ் உடன் 'தங்கமகன்', சியான் விக்ரமுடன், ' 10 எண்றத்துக்குள்ள,' ஜீவாவுடன், ' நீதானே, என் பொன்வசந்தம்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இதுதவிர, 'புஷ்பா' படத்தில், 'ஊ சொல்றியா மாமா' பாடல் காட்சி மூலம் பட்டி, தொட்டியெங்கும் பிரபலமானவர் சமந்தா.
சென்னை, பல்லாவரத்தை சேர்ந்த இவர், தெலுங்கு படவுலகில் பிரபலமாகி, பின் தமிழ் திரையுலகுக்கு வந்தார். அவரது அழகிய தோற்றம், ரசிகர்களை வசீகரித்தது. எனவே, தொடர்ந்து தமிழ் படங்களில் இவருக்கு, முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு குவிந்தது. இதற்கிடையில், சினிமா நட்சத்திர ஜோடி நாகர்ஜூனா - அமலா, தம்பதியின் மகனை திருமணம் செய்து, பின் பிரிந்து வந்து விட்டார். தொடர்ந்து, படங்களில் நடித்து வந்த நிலையில், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார்.
தற்போது, சருமம் சார்ந்த ஒருவகை நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோய் பாதிப்பில் இருந்து, விரைவில் மீண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை சமந்தா தனது குணாதிசயங்கள் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது,
எனக்கு கோபம் வரும்போதெல்லாம் ஜிம்முக்கு சென்று, கண்டபடி உடற்பயிற்சி செய்வேன். உடனே கோபம் தணிந்து விடும். நான் பணம், பெயர் புகழுக்காக எப்போதுமே நான் அலைய மாட்டேன். பணம் எனக்கு முக்கியம் இல்லை. நடிப்புதான் முக்கியம். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேசிக்கிறேன். செய்யும் வேலையை நேசிக்க முடியாதபோது, அதில் எந்தவித சந்தோஷமோ அல்லது பிரயோஜனமோ இருக்காது. எனக்கு நானே பெரிய விமர்சகி. நம் தவறுகளை நாம் தெரிந்து கொள்ளும்போதுதான் தொழிலில் முன்னேற முடியும்.
காலம் நமக்கு சாதகமாக இல்லாதபோது நமக்கு எதுவும் கைகூடாது. அந்த சமயத்தில் அதையே நினைத்து கவலைப்பட மாட்டேன். யோசிப்பதை விட்டுவிட்டு தூங்கி விடுவேன். உனக்கு பிடித்தது போலவே நீ இரு. நீ இந்த பூமியின் மீது வந்தது மற்றவர்களின் பாராட்டை பெறுவதற்கோ அல்லது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்கோ அல்ல. நமக்கு இருப்பதையே நாம் இஷ்டப்பட ஆரம்பித்தால் தேவையானவை எல்லாம் நம்மை தேடி வரும்.
இவ்வாறு சமந்தா கூறியுள்ளார்.
வாழ்க்கையில், புகழ்பெற்ற ஒரு முன்னணி நடிகையாக இருந்தும், கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் நிலையில் வாழ்ந்தும் வாழ்க்கை குறித்து சமந்தா கூறியிருக்கும் வார்த்தைகள், ஆச்சரியமாக இருக்கிறது. கவலைகளும், துன்பங்களும் தவிர்க்க முடியாதது என்பதை இவ்வளவு அழகாக கூறி விட்டாரே, என பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.